'பெப்சி' போராட்டம் காரணமாக, ஐதராபாத்தில் நடைபெற இருந்த கவுதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) சேர்ந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள், சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து `பெப்சி' தொழிலாளர்களுடனும், பட அதிபர்களுடனும் தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தியது. மீண்டும் வருகிற 9-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்க, ஜீவா-சமந்தா நடிக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்' என்ற படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நேற்று நடைபெறவிருந்தது. 'பெப்சி' போராட்டம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
"இந்த படம், தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் நடைபெற இருப்பது தெலுங்கு படப்பிடிப்பு. எனவே படப்பிடிப்பு நடைபெற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்று தெலுங்கு சினிமா தொழிலாளர்களிடம், கவுதம் மேனன் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அதற்கு அங்குள்ள சினிமா தொழிலாளர்கள் சம்மதிக்கவில்லை. "பெப்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருவதால், இந்த படத்தில் நாங்கள் வேலை செய்ய மாட்டோம்'' என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அதைத் தொடர்ந்து, `நீதானே என் பொன் வசந்தம்' படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
|