யாருக்குத் தெரியும் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா திங்கள்கிழமை சென்னையில் நடந்தது. பாடல்களை இயக்குநர் வசந்த் வெளியிட, மௌன குரு படத்தின் இயக்குநர் சாந்தகுமார் பெற்றுக் கொண்டார்.
பாடல்களை வெளியிட்ட பின் இயக்குநர் வசந்த் பேசுகையில், "தயாரிப்பாளர் ஸ்ரீதரன் எனது 10 ஆண்டுகால நண்பர். யாருக்கு தெரியும் கதை எனக்குமட்டும் முன்பே தெரியும்.
இதைப்போல ஒரு படம் இதுவரை வந்ததில்லை என்கிற அளவிற்குச் சிறப்பான படமாக யாருக்கு தெரியும் இருக்கும். இன்றைய தேதியில் ஒரே படத்தை ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளில் எடுப்பது வியாபார ரீதியில் மிகவும் புத்திசாலித்தனமான செயல்," என்றார்.
படத்தின் இயக்குனர் கணேசன் காமராஜ் பேசுகையில், "யாருக்கு தெரியும்' புதுமையான திரில்லர் படம்.
தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருக்கும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் பெரிய கதாநாயகர்களை வைத்து வியாபார ரீதியாகத் திட்டமிட்டு பெரிய படம் எடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து யாருக்கு தெரியும் படத்தினை தயாரித்திருக்கிறார்கள். தமிழ் உட்பட மூன்று மொழிகளில் வெளிவர இருக்கும் இந்தப் படத்தினை 3 க்கும் மேற்பட்ட கேமராக்களைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மகேஷ் கே தேவ்," என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீதரன் பேசும்போது, "இந்தக்கதையை இயக்குனர் கணேசன் காமராஜ் என்னிடம் சொல்கையில் 18 இடங்களில் கேள்விகள் கேட்கவேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன்...ஆனால் அந்தக் கதையின் கடைசி 15 நிமிடங்களில் இயக்குனர் சித்தரித்திருக்கும் காட்சிகள் அதற்கான விடைகளாக இருந்தன. இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகனுக்கும் இதே அனுபவம் ஏற்படும்," என்றார்.
இயக்குனர் சாந்தகுமார், நடிகர் திலகத்தின் பேரன் சிவாஜி தேவ், ஆகியோரும் யாருக்கு தெரியும் அணியினரை வாழ்த்தினார். இந்தப் படத்தின் பாடல்களை வாலியும் யுகபாரதியும் எழுதியுள்ளனர்.
இந்தப் படத்தில் நிஷாந்த்,திலீப், அச்சுதா, ஹரிஷ் ராஜா, சுஜா, சஞ்சனா, கலாபவன் மணி மற்றும் ஜெயபிரகாஷ் நடித்துள்ளனர்.
அருபெரே ஆர்ட் வென்சுரா பி லிமிடட் சார்பில் எஸ் ஸ்ரீதரன் தயாரித்துள்ளார். இயக்குநர் கணேசன் காமராஜுக்கு இது முதல் படம்.
|